Archives: ஏப்ரல் 2018

சங்கலிகளை முறித்தல்

ஸான்சிபாரின் ஸ்டோன் டவுன் பட்டணத்தில் உள்ள கிரைஸ்ட் சர்ச்சு தேவாலயத்திற்கு சென்றது உண்மையிலேயே ஒரு மறக்கமுடியாத அனுபவம். ஒருகாலத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவின் பெரிய அடிமை சந்தை இருந்த அதே இடத்தில் இப்பொழுது அந்த ஆலயம் காணப்படுகிறது. ஆலய கட்டடத்தை வடிவமைத்தவர்கள் சுவிசேஷம் எப்படி அடிமை சங்கிலிகளை முறியடிக்கிறது என்பதை அடையாளமாகக் காண்பிக்க விரும்பினார்கள். இப்போது அது குற்றச்செயல்களும் கொடுமைகளும் அரங்கேறும் இடமாக இல்லாமல், ஆண்டவருடைய கிருபையை வெளிப்படுத்தும் ஒரு ஸ்தலமாக அது விளங்குகிறது.

இந்த ஆலயத்தை கட்டியவர்கள் இயேசுவின் சிலுவை மரணம் நமக்கு எப்படி பாவத்திலிருந்து விடுதலையை பெற்றுத்தருகிறது என்பதை வெளிப்படுத்த விரும்பினார்கள் – எபேசு சபைக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதின நிருபத்தில்: இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது (எபே. 1:7) என்று சொல்லப்பட்டுள்ளது. இங்கே ‘மீட்பு’ என்கின்ற வார்த்தை பழைய ஏற்பாட்டுக் கால சந்தையில் அடிமையாக விற்கப்பட்ட நபரை அல்லது பொருளை திரும்பபெறுவதற்கு பயன்படுத்தப்படும் பதம். பாவத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமையாகிப் போன நபரை இயேசு மீட்கிறார்.

பவுல் எழுதின நிருபத்தின் முதல் வார்த்தைகளில் (வச. 3-14) கிறிஸ்துவுக்குள் கிடைக்கபெறும் விடுதலையை நினைத்து அவர் எவ்வளவாய் மகிழ்கிறார் என்பதை பார்க்கிறோம். உள்ளத்தில் துதியும் ஸ்தோத்திரமும் பொங்க இயேசுவின் மரணத்தின் மூலமாக பாவப்பிடியிலிருந்து நம்மை விடுவிக்கும் ஆண்டவருடைய இரக்கத்தின் கிரியையை அங்கே அளவளாவுகிறார். நாம் இனியும் பாவத்திற்கு அடிமையாக இருக்கவேண்டியதில்லை. ஆண்டவருக்கும், அவருடைய மகிமைக்காகவும் வாழ நாம் விடுவிக்கப்பட்டுள்ளோம்.

மறுபடியும் இயேசுவை நன்றாகக் கவனியுங்கள்!

நான் பார்த்ததிலேயே உண்மையுள்ள நபர் என்று ஒருவரை சொல்லக்கூடுமானால் அது சகோதரர் ஜஸ்டிஸ் ஆகத்தான் இருக்கமுடியும். தன் குடும்பம், தன் வேலை, தன் சபை பொறுப்பு என்று எல்லாவற்றிலும் அவர் உண்மையும் பொறுப்புள்ளவருமாய் இருந்தார். சமீபத்தில் பிள்ளைப்பருவத்தில் நான் போய்க்கொண்டிருந்த ஆலயத்திற்கு சென்றிருந்தேன். அங்கே பியானோ கருவியின் பக்கத்தில் தொங்கிகொண்டிருந்த பழைய ஆலயமணியை கவனித்தேன். அந்த நாட்களில், வேதபாடம் முடியப்போகிறது என்பதை உணர்த்த சகோதரர் ஜஸ்டிஸ் அந்த மணியிலிருந்து தான் ஒலியெழுப்புவார். காலத்தை தாண்டி அந்த ஆலயமணி இன்றும் நிலைத்து நிற்கிறது. சகோதரர் ஜஸ்டிஸ் கர்த்தரோடு இருக்கும்படி சென்று பல வருடங்கள் ஆனாலும், அவர் விட்டுசென்ற உண்மைத்துவத்தின் பாரம்பரியம் நிலைத்து நிற்கிறது.

எபிரயேர் 3-ஆம் அதிகாரம் ஒரு உண்மையுள்ள ஊழியன் மற்றும் ஒரு உண்மையுள்ள குமாரனை நம்முடைய கவனத்தின் கீழ் கொண்டுவருகிறது. தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் உண்மைத்துவத்தை நாம் மறுக்கமுடியாவிட்டாலும், விசுவாசிகளின் பார்வை இயேசுவின்மீதே இருக்கவேண்டும் என்று போதிக்கப்படுகிறது. “ஆகையால், பரிசுத்த சகோதரர்களே சகோதரிகளே… கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்” (வச. 1) சோதிக்கப்படுகிறவர்களுக்கு இது ஒரு பெரிய உற்சாகத்தைத் தருகிறது. உண்மையுள்ளவராகிய இயேசுவை பின்பற்றுவதனாலேயே இந்த சுதந்தரம் உண்டாகிறது.

சோதனையின் காற்றுகள் உங்களை சூழும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? சோர்ந்து களைத்துபோய், எதுவும் வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தால் என்ன செய்வீர்கள்? இந்த வேதபகுதியில்-ஒரு விரிவுரை தொகுப்பில்-உள்ளது போல், “இயேசுவை நன்றாக உற்று கவனியுங்கள் (3:1). அவரை மறுபடியும் பாருங்கள் – மறுபடியும் மறுபடியும் பாருங்கள். இயேசுவை நாம் மீண்டும் மீண்டும் நம் பார்க்கும்போது, அவருடைய குடும்பத்திற்குள் வாழ்ந்திட அவர் நம்மை திடப்படுத்துகிறார்.

பணித்தள பயிற்சி

என் மகனின் அறிவியல் ஆசிரியர் நடத்தும் அறிவியல் முகாமுக்கு என்னை ஒரு மேற்பார்வையாளனாக இருக்கும்படி கேட்டார்கள். நான் தயங்கினேன். கடந்தகால தவறுகள் மற்றும் கெட்டப் பழக்கங்களோடு போராடிக்கொண்டிருக்கும் நான், எப்படி ஒரு முன்மாதிரியாக முடியும்? என் மகனை அன்புடனும் பண்புடனும் வளர்க்க ஆண்டவரே உதவினார். ஆனாலும் என்னை மற்றவர்களின் பிரயோஜனத்திற்கு ஆண்டவரால் பயன்படுத்த முடியுமா என்று சந்தேகித்தேன்.

ஒரு சில சமயங்களில், சம்பூரணரும், இருதயங்களையும் வாழ்க்கையையும் மாற்றக்கூடியவருமாகிய ஆண்டவர் ஏற்றகாலத்தில் நம்மை முழுமையாக மறுரூபமாக்குவார் என்பதை என்னால் முழுவதும் கிரகித்துக்கொள்ளமுடியவில்லை. தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதும்போது வேலையில் கிடைக்கும் பயிற்சியை உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்டு, விசுவாசத்தில் நிலைத்திருந்து, தேவன் அவனுக்கு அளித்த வரத்தை பயன்படுத்தும்படி சொன்னதை பரிசுத்த ஆவியானவர் எனக்கு நினைப்பூட்டினார் (2 தீமோ. 1:6). தன்னகத்தே உள்ள மக்களுக்கு ஊழியம் புரிந்து அவர்களை வளர்ப்பதற்கு தேவையான அன்பையும், ஒழுக்கத்தையும் (வச. 7) தன் வல்லமையின் ஆதாரமாகிய ஆண்டவர் தனக்கு தருவார் என்பதில் தீமோத்தேயு தைரியம் அடையமுடியும்.

கிறிஸ்து நம்மை இரட்சித்து நம்முடைய வாழ்க்கையின் மூலம் அவரை கனப்படுத்த நம்மை தகுதிபடுத்துகிறார். அதற்கான விசேஷ தகுதி நம்மிடம் இருப்பதினாலன்று, நாம் ஒவ்வொருவரும் அவருடைய குடும்பத்தில் மதிப்பிற்குரிய அங்கத்தினராய் இருப்பதினாலேயே (வச. 9) அது நடக்கிறது.

தேவனிடத்திலும், பிறனிடத்திலும் அன்பாய் இருப்பதே நம்முடைய பங்கு என்பதை நாம் அறிந்துகொண்டால் நம்பிக்கையுடன் முன்னேறலாம். நம்மை இரட்சித்து, உலகத்தை பற்றி நமக்குள்ள குறுகிய தரிசனத்தை மாற்றி நமக்கு ஒரு உன்னத நோக்கத்தை கொடுப்பதே கிறிஸ்துவின் பணி. இயேசுவை நாம் அனுதினமும் பின்பற்றுகையில், அவர் நம்மை எங்கெல்லாம் அனுப்புகிறாரோ அங்கெல்லாம் அவருடைய அன்பையும், சத்தியத்தையும் பகிர்ந்து பிறரை உற்சாகப்படுத்தும்போது அவர் நம்மையும் மறுரூபமாக்குகிறார்.

ஞானத்தின் அழைப்பு

பிரிட்டன் நாட்டின் பிரசித்திபெற்ற பத்திரிக்கையாளரும் சமுதாய ஆர்வலருமான மால்கம் மக்ரிஜ், தன்னுடைய அறுபதாவது வயதில் விசுவாச அனுபவத்திற்குள் வந்தார். அவருடைய எழுபத்தி-ஐந்தாவது பிறந்ததினத்தில், மனித வாழ்க்கையை பற்றிய இருபத்தி ஐந்து அறிய சிந்தனைகளை பகிர்ந்துகொண்டார். அதிலே ஒன்று, “சந்தோஷமாயிருக்கிற பணக்காரனை நான் சந்தித்ததேயில்லை. ஆனாலும், பணக்காரன் ஆகவேண்டும் என்று விரும்பாத ஏழையையும் நான் மிக அபூர்வமாகத் தான் சந்தித்திருக்கிறேன்”

நம்மில் அநேகர், பணம் நமக்கு சந்தோஷத்தை தராது, என்பதை ஏற்றுக்கொள்வர். ஆனாலும், அதனை நிச்சயிக்க கூடுதலான பணத்தை சேர்த்துக்கொண்டும் இருப்பர்.

ராஜா சாலமோனுக்கு இருந்த சொத்தின் மதிப்பு கிட்டத்தட்ட இரண்டு டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிட்டுள்ளனர். ஒருவேளை அவர் பெரும் செல்வந்தராக இருந்தாலும், பணத்திற்கும் ஒரு எல்லை உண்டு என்று அறிந்திருந்தார். நீதிமொழிகள் 8 அவருடைய அனுபவத்தை ஒட்டி எழுதப்பட்ட ஒன்று. அது எல்லா மக்களுக்கும் விடுக்கப்படும் “ஞானத்தின் அழைப்பு”. “என் சத்தம் மனுபுத்திரருக்கு தொனிக்கும்…என் வாய் சத்தியத்தை விளம்பும் (வச. 4-7). வெள்ளியைப்பார்க்கிலும் என் புத்திமதியையும், பசும்பொன்னைப் பார்க்கிலும் ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள். முத்துக்களைப்பார்க்கிலும் ஞானமே நல்லது; இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல (வச. 10-11).

ஞானம் சொல்கிறது, “பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த வெள்ளியைப் பார்க்கிலும் என் வருமானம் நல்லது. என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும், அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன் (வச. 19-21).

மெய்யாகவே இவைகள் அறிய செல்வங்கள்!

தொடர்புடைய தலைப்புகள்

> odb

வனாந்தரமான இடங்கள்

நான் ஒரு இளம் விசுவாசியாக இருந்தபோது, நான் இயேசுவை சந்திக்கும் இடமாக “மலையுச்சி” அனுபவங்களை நினைத்தேன். ஆனால் அந்த உயரங்கள், நீடிக்கவில்லை அல்லது வளர்ச்சிக்கு வழிவகுக்கவில்லை. வனாந்தரங்களில் தான் நாம் தேவனைச் சந்திக்கிறோம், வளர்கிறோம் என்கிறார் ஆசிரியர் லீனா அபுஜம்ரா. த்ரூ தி டெஸெர்ட் என்ற தனது வேத ஆராய்ச்சியில், “நம் வாழ்வில் உள்ள வனாந்தரங்களைப் பயன்படுத்தி நம்மைப் பலப்படுத்துவதே தேவனின் நோக்கம்” என்று எழுதுகிறார். “தேவனின் நன்மை உங்கள் வேதனையின் மத்தியில் பெறப்பட வேண்டும், வேதனை இன்றி அதனை நிரூபிக்க இயலாது” என மேலும் எழுதுகிறார்.

துக்கம், இழப்பு மற்றும் வலி போன்ற கடினமான இடங்களில்தான் நாம் நம் நம்பிக்கையில் வளரவும், அவருடன் நெருங்கவும் தேவன் உதவுகிறார். லீனா கற்றுக்கொண்டது போல், “தேவனின் திட்டத்தில் வனாந்தரம் அசட்டை செய்யப்பட்ட பகுதியல்ல, மாறாக நாம் வளரும் செயல்முறையில் ஒருங்கிணைந்த பகுதியாகும்.”

தேவன் பல பழைய ஏற்பாட்டின் முற்பிதாக்களை வனாந்தரத்திற்கு அழைத்துச் சென்றார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய அனைவருக்கும் வனாந்தர அனுபவங்கள் இருந்தன. வனாந்தரத்தில்தான் தேவன் மோசேயின் இருதயத்தை ஆயத்தப்படுத்தி, அடிமைத்தனத்திலிருந்து தம் ஜனங்களை வெளியே வழிநடத்த அவரை அழைத்தார் (யாத்திராகமம் 3:1-2, 9-10). வனாந்தரத்தில்தான் தேவன் தனது உதவியுடனும் வழிகாட்டுதலுடனும் நாற்பது ஆண்டுகளாக [இஸ்ரவேலர்] நடந்துவருகிறதை அறிவார் (உபாகமம் 2:7).

தேவன் மோசேயுடனும் இஸ்ரவேலருடனும் வனாந்தரத்தில் ஒவ்வொரு அடியிலும் இருந்தார், அவர் உங்களுடனும் என்னுடனும் இருக்கிறார். வனாந்தரத்தில் தேவனைச் சார்ந்திருக்கக் கற்றுக்கொள்கிறோம். அங்கே அவர் நம்மைச் சந்திக்கிறார்; அங்கே நாம் வளர்கிறோம்.

 

என்ன ஆச்சரியமான சிநேகிதன்!

எனக்கு விருப்பமான பக்கத்துவீட்டுக்காரர்களுடன் என் அம்மாவும் நட்பு போட்டியாளர்களாக வளர்ந்தனர். இருவரும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் போட்டியிட்டனர். அவர்கள் புதிதாகத் துவைத்த சலவைகளை முதலில் தங்கள் வெளிப்புற ஆடைகளை தொங்கவிடுவார்கள். “அவள் என்னை மறுபடியும் ஜெயித்துவிட்டாள்!” என்று என் அம்மா சொல்வார். ஆனால் அடுத்த வாரம், எனது மாமா முதல் ஆளாய் இருந்து அவர்களின் போட்டியை ரசிப்பார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் ஒருவருக்கொருவர் ஞானம், கதைகள் மற்றும் நம்பிக்கையை பகிர்ந்து கொண்டனர்.

அத்தகைய நட்பின் நற்பண்பைப் பற்றி பைபிள் மிகுந்த மென்மையுடன் பேசுகிறது. “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்” (நீதிமொழிகள் 17:17) என்று சாலெமோன் சொல்கிறார். மேலும் அவர், “ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்” (27:9) என்கிறார்.

இயேசுவே நம்முடைய சிறந்த சிநேகிதனாய் இருக்கமுடியும். தம்முடைய சீஷர்களுக்கு அன்பின் மேன்மையை வலியுறுத்தி, “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” (யோவான் 15:13) என்று கற்றுக்கொடுத்தார். அடுத்த நாளே, அவர் சிலுவையில் அதை நிரூபித்தர். அவர் அவர்களிடம், “நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்” (வச. 15) என்றார். பின்னர் அவர், “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன்” (வச. 17) என்று வலியுறுத்துகிறார்.

இதுபோன்ற வார்த்தைகளின் மூலம் சாதாரண மனிதர்களை சிநேகிதர்களாய் நம்பிக்கைக்குரியவர்களாய் இயேசு “தனக்கு செவிசாய்ப்பவர்களை உயர்த்துகிறார்” என்று தத்துவஞானி நிக்கோலஸ் வோல்டர்ஸ்டார்ஃப் கூறுகிறார். கிறிஸ்துவில், நாம் மற்றவர்களுடன் நட்பு கொள்ள கற்றுக்கொள்கிறோம். அத்தகைய அன்பை நமக்குக் கற்பிக்க இயேசு ஒரு சிறந்த சிநேகிதனாய் இருக்கிறார். 

 

விண்வெளி பந்தயம்

ஜூன் 29, 1955 இல், அமெரிக்கா செயற்கைக்கோள்களை விண்வெளியில் அமைக்கும் திட்டத்தை அறிவித்தது. விரைவில், சோவியத் யூனியனும் அதைச் செய்வதற்கான திட்டங்களை அறிவித்தது. விண்வெளிக்கான பந்தயம் தொடங்கியது. சோவியத், முதல் செயற்கைக்கோளை (ஸ்புட்னிக்) ஏவியது மற்றும் யூரி காகரின் நமது கிரகத்தை ஒரு முறை சுற்றி வந்தபோது, முதல் மனிதனையும் விண்வெளியில் செலுத்தியது. ஜூலை 20, 1969 அன்று, நிலவின் மேற்பரப்பில் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் “கால்தடம்” போட்டியை அதிகாரப்பூர்வமற்ற முறையில் முடிக்கும் வரை இந்த பந்தயம் நீடித்தது. இனைந்து பணியாற்றும் காலம் விரைவில் உதயமானது, இது சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்க வழிவகுத்தது.

சில நேரங்களில் போட்டி ஆரோக்கியமானதாக இருக்கலாம், அது நாம் முயற்சி செய்யாத விஷயங்களைச் சாதிக்க நம்மைத் தூண்டுகிறது. இருப்பினும், மற்ற நேரங்களில், போட்டி அழிவுகரமானது. கொரிந்துவில் உள்ள சபையில் இது ஒரு பிரச்சனையாக இருந்தது, ஏனெனில் வெவ்வேறு குழுக்கள் பல்வேறு சபை தலைவர்களை தங்கள் நம்பிக்கையின் கலங்கரை விளக்கங்களாகப் பற்றிக்கொண்டன. இதனைச் சமாளிக்க பவுல், “நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்” (1 கொரிந்தியர் 3:7) என்று எழுதியபோது, “நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்” (வ.9) என்று நிறைவு செய்தார்.

உடன்வேலையாட்கள்; போட்டியாளர்கள் அல்ல. மேலும் ஒருவருக்கொருவர் மட்டுமல்ல, தேவனோடும்! அவருடைய அதிகாரம் மற்றும் அவரது வழிகாட்டுதலின் மூலம், இயேசுவின் செய்தியை முன்னெடுத்துச் செல்ல உடன்வேலையாட்களாக நாம் ஒன்றுசேர்ந்து பணியாற்றலாம், நம்முடையதை காட்டிலும் அவருடைய மகிமைக்காக.